இலங்கை ரக்பி உலகின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்த வசீம் தாஜுதீன் உயிரிழந்து இன்றுடன் 13 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
ஹவ்லொக்ஸ் கழகம் மற்றும் இலங்கை தேசிய அணிக்காக விளையாடிய வசீம் தாஜுதீன், 2009 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான ரக்பி வீரர் விருதை வென்றவர்.
தனது 28வது வயதிலேயே கொடூரமாகத் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். அதுவும் சம்பவம் நடைபெற்றது அதிக வாகனப்போக்குவரத்து இருக்கும் கொழும்பின் முக்கிய வீதியொன்றில்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவரது கொலையாளிகள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
இந்த வழக்கில் நீதி கிடைப்பது நீண்டகாலமாகத் தாமதமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காலம் கடந்தேனும் நீதி நிலைநாட்டப்பட்டு, வசீம் தாஜுதீனை இழந்து துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
அவரது 13வது நினைவு தினமான இன்று, ரக்பி சமூகம் மற்றும் அவரது ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.